Tuesday, August 30, 2011

கமர்சியல் பக்கங்கள் - 30/08/2011


பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேருடைய தூக்கு தண்டனையையும் சென்னை உயர் நீதிமன்றம் எட்டு வாரத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது, அது நிரந்தரமாகவும் ஆகி தூக்கி தண்டனையிலிருந்து தப்பி விடுவார்கள் என நம்பலாம், அதே போல் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கும் நன்றி.

எந்த பிரச்சனையானாலும் ஒரு உயிரை பறிப்பதால் எந்த தீர்வும் வந்துவிட போவதில்லை, மனித வாழ்க்கையே தூக்கு தண்டனையை விட கொடுமையாக இருக்கும் இக்காலத்தில் குற்றம் செய்தது முழுமையாக நிரூபிக்கபடாமல் தூக்குதண்டனை விதிப்பது மிகவும் கொடுமையானது.


எது எப்படியோ சீக்கிரமே இந்த பிரச்சனை நல்லபடியாக முடியும் என நம்புவோம், இதற்காக உயிரை நீத்த செங்கொடியின் முடிவு அபத்தமானதாக இருப்பினும், அன்னாரது ஆத்மாவும் சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்.


எப்படியோ ஜன் லோக்பால் ஏற்க்கப்பட்டு, அண்ணா ஹசாரேவின் போராட்டம் வெற்றியடைந்ததாக அறிவிக்கப்பட்டுவிட்டது, டிவியில் பார்க்கும் போது நாட்டு மக்கள் எல்லாரும் கொண்டாடி தீர்த்துவிட்டனர், நாடே சந்தோசமா இருக்கும் போது நம்ம வீடு மட்டும் எழவு வீடு மாதிரி இருக்கனும்கறதுதான் மத்திய அரசோட விருப்பம் போல, இங்கு மட்டும் இறுக்கமான சூழ்நிலை.

பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத்துல பேசும் போது, லோக்பால் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இந்த தீர்மானத்தை நாடாளுமன்ற தீர்மான குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும், தேவைப்படும் போது அமல்படுத்தப்படும்னு அறிவிச்சாரு, தேவைப்படும் போது அமல்படுத்தப்படுமா? அரசியல்வாதிகளுக்கு இது எப்படி தேவைப்படும்? அப்ப மறுபடியும் நாமதான் அவுட்டான்னு தோணுச்சு, சரி பார்ப்போம், என்ன ஆகப்போகுதுன்னு.

ஊழலை எதிர்த்து அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க ராம்லீலா மைதானத்துக்கு வந்தவங்க எல்லாம், வேலை முடிஞ்சதும், தண்ணி பாட்டல், சாப்பாட்டு பொட்டலம்னு கண்ட எடத்துல போட்டு நாறடிச்சிட்டு போயிட்டாங்க, அங்க அவ்வளவு குப்பைத்தொட்டி இருந்தும், என்ன பண்ணுனாலும் இந்த விசயத்துல மட்டும் நம்மாளுகள திருத்தமுடியாது போல.

சில பேக்கரி, கடைகள்ல எல்லாம் பார்த்திருப்பீங்க, கலர்கலரா விதவிதமா லேசர் ஷோ மாதிரி லைட் எரியற ஸ்டேண்ட் மாதிரி ஒன்னை வச்சிருப்பாங்க, அது பொதுவா சீலிங்க பார்த்துதான் இருக்கும், அத போட்டு பார்த்தா செவுத்துல அழகா இருக்கும், ஆனா இங்க ஒரு புண்ணியவான் இருக்காரு.

அந்த லைட்ட ரோட்டுல தெரியறமாதிரிதான் போட்டு வச்சிருப்பாரு, நாம வண்டி ஓட்டிட்டு போகும் போது திடீர்னு விதவிதமா லைட்டெல்லாம் நம்ம மேலயும் ரோட்டுலயும் தெரியும், எங்கிருந்துடா லைட் வருதுன்னு ஒரு நிமிசம் கண்டிப்பா திரும்பி பார்த்துதான் ஆகணும், வேகமா போய்கிட்டு இருக்கற ரோட்டுல திடீர்னு கவனம் திரும்பினா என்ன ஆகும்? கண்டிப்பா ஒருநாள் இல்லைன்னாலும் ஒரு நாள் ஆக்சிடெண்ட் ஆக சான்ஸ் இருக்கு,

நிறைய தடவை அந்தாளுகிட்ட சொல்லி இருக்காங்க, ரெண்டு நாள் திருப்பி வச்சா மூணாவது நாள் மறுபடியும் ரோட்டுக்கே திருப்பி விட்டுடுடறான், ஒருநாள் இருக்குடி உனக்கு, யாராவது இதுமாதிரி லைட்ட போட்டு வண்ணஜாலம் காட்டறவங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்களா இருந்தாங்கன்னா தயவுசெஞ்சு நிறுத்த சொல்லுங்க, அவங்களுக்கு வண்ணஜாலம் காட்டுற லைட்டு யாருக்காவது கருப்பு கொடி காட்டிட போகுது.

எ.கொ.சா இது???




படிச்சதில் பிடிச்சது
சமீபத்துல கூகிள் பஸ்ஸுல ஒரு ஆர்ட்டிகிள் படிக்க நேர்ந்தது,
இந்தியனா பிறந்ததுக்கு வெட்கப்படுறேன்னு ராகுல் வின்சி
சாரி சாரி ராகுல் காந்தி உத்திரபிரதேசத்துல 
போய் ஒரு பேட்டி கொடுத்தாராம்நீ பொறந்ததுக்கே 
நாங்கெல்லாம் வெட்கப்படுறோம்னு நிதின் குப்தாங்கறவரு,
மும்பைல இருந்து ஒரு லெட்டர் எழுதி இருக்காரு,
செமயா இருக்குதுநீங்களும் படிச்சு பாருங்க,

எங்க பக்கத்து வீட்டு குழந்தை ஒன்னு என்னை பார்த்தாலே பயந்து ஓடும், (நான் என்ன அவ்வளவு டெரராவா இருக்கேன்?) அதையும்
மீறிப்போய் புடிச்சா வீல்ல்ல்ன்னு கத்தும்அவ்வளவு பயந்தசுபாவம்
உள்ள குழந்தைநேத்து நான் படிச்சிட்டு இருக்கும் போது
பின்னாடி வந்துகாஞ்ஞ்ஞ்சனானா முனி பார்ட் டூன்னு கத்துது,
என்னை பயமுறுத்துதாம்சைலண்டா திரும்பி பார்த்தா
மறுபடியும் என்னை பார்த்து கத்திட்டே ஓடுதுஒருவேளை
குளோசப்புல பார்த்திருச்சோ என்னவோ J
(கேவலப்பட்டுட்டாண்டா பிளாக்கரு)
இதெல்லாம் ஏன் எழுதறேன்னு கேட்குறீங்களா?
அப்பத்தான் பல்சுவைபதிவுன்னு ஒத்துக்குவாங்க J



நாட்டுல பசுமாட்டுக்கு கூட குடிக்க தண்ணி இல்லாம அடிபம்ப அடிக்க வச்சுட்டாங்க நம்மாளுங்க..!

Saturday, August 27, 2011

யுவன் யுவதி..!



தமிழ் சினிமாவின் கல் தோன்றி மண் தோன்றா காலத்து காதல் கதைதான் இந்த யுவன் யுவதியும், காட்சி அமைப்புகளிலாவது வித்தியாசம் செய்து கவர்கிறார்களா என பார்த்தால் வேண்டா வெறுப்புக்கு படம் எடுத்து யுவன் யுவதி என்ற பெயரை வைத்தது மாதிரிதான் இருக்கிறது.

ஊரில் பெரிய மனிதராக இருக்கும் சம்பத்தின் மகன் பரத், அப்பா பார்த்து வைக்கும் பெண்ணை பிடிக்காமல் அமெரிக்கா ஓடிப்போக பார்க்கிறார், அமெரிக்கன் எம்பசியில் விசாவிற்காக காத்திருக்கும் வேலையில் ஹீரோயின் ரீமாவுடன் சண்டை போடுகிறார்.

தமிழ் சினிமாவின் இலக்கணப்படி, சண்டையில் தொடங்கும் பரத்தின் நட்பு காதலாக மலர்கிறது, காதலை தெரிவிக்க நினைக்கும் வேலையில் காதலி அமெரிக்கா போவதே திருமணம் செய்யத்தான் என்ற உண்மை தெரிகிறது, அதே வேளையில் மகன் ஓடிப்போவது தெரிந்த சம்பத் என்ன செய்தார்? ரீமா அமெரிக்கா போனாரா? திருமணம் நடந்ததா? பரத்தும் ரீமாவும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே என்பதே யுவன் யுவதி கதை.


டிவி சீரியல் கூட விறுவிறுப்பாக போய்கொண்டு இருக்கும் காலத்தில், இவ்வளவு ஸ்லோவாக படத்தை கொண்டு போய் தியேட்டரில் பாப்கார்ன் விற்பவரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பல காட்சிகளில் பரத் ரீமாவின் பின்னால் அலைந்து ஹாய் ஹாய் என்று சொல்கையில் படம் பார்க்கும் நமக்கே டார்ச்சராக இருக்கும் போது கதாநாயகி டார்ச்சராவதில் தவறில்லையே என்று தோன்றுகிறது.

படு போரான திரைக்கதையில் கொஞ்சமாவது கலகலப்பூட்டுவது சந்தானம்தான், அவரும் இல்லையென்றால் பாதிப்பேர் தியேட்டர் ஸ்கீரினிலேயே தூக்கு போட்டு செத்திருப்பார்கள், வழக்கமாக சிக்சராக அடிக்கும் சந்தானம் இதில் ஃபோர் மட்டுமே அடிக்கிரார், காமெடி டிராக் எழுதியது யாரோ? இடைவேளை வரையாவது பார்க்கும்படியாக படம் இருப்பதே ஆறுதல்.

கேயாக வரும் சத்யனும், ஆட்டோ ஓனராக வரும் மயில்சாமியும் ஒரு சீனில் மட்டுமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள், சத்யன் படத்துக்கு படம் மெருகேறி வருகிறார், அதிலும் அவர் இதுக்குதான் நான் கேர்ள்சோட சேர்றதே இல்லை என கூறும் போது வெடிச்சிரிப்பு.


படத்தின் இசை விஜய் ஆண்டனி, இயக்குனர் காதலில் விழுந்தேன் படம் 
மாதிரியே பாடல் கேட்டிருப்பார் போல, அனைத்து பாடல்களுமே காதலில் விழுந்தேன் டியூனிலேயே இருக்கிறது, அதிலும் நாக்கமுக்க போலவே அதே டியூனில் ஒரு பாஸ்ட் பீட் போட்டு இருக்கிறார் பாருங்கள், சுத்தம்.

வர வர தமிழ்சினிமாவில் கதாநாயகர்கள் தலைசீவாமல் வருவது ஃபேஷனாகி விட்டது போல, கோவில் ஜீவா, வானத்தில் சிம்பு போல, இதில் பரத்தும், ஆனால் பார்க்கத்தான் என்னவோ போல் இருக்கிறது, பரத்துக்கும் காதல் காட்சிகளுக்கும் காத தூரம் இருக்கும் போல, காதல் காட்சிகளில் என்ன எழவோ என பார்த்துக் கொண்டு இருக்கிறார், பரத்தின் வெற்றிப்பட வரிசையில் மற்றுமோர் தோல்விப்படம், வழக்கம் போல ஹீரோயினே ஆறுதல்.


செஷல்ஸ் தீவின் அழகைப்போல ஹீரோயினும் அவ்வளவு அழகு, படத்தை ரிலீஸ் செய்து சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கிறார்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தார், டைட்டில் டிசைனும், செஷல்ஸ் தீவின் அழகை படம் பிடித்த விதமும் கண்ணுக்கு குளிர்ச்சி, கூடவே ஹீரோயினும், இடைவேளை வரை படம் பார்த்துவிட்டு ஓடி வந்து விடலாம்.

மொத்தத்தில் யுவன் யுவதி, கைக்காசுக்கு சனி, மற்றபடி தடி கொடுத்து அடி வாங்க நினைப்பவர்கள் தாராளமாக பார்க்கலாம்.

================================================================================== 


நேற்றைய பதிவின் லிங்க் இது, நேற்று லிங்க் எங்கேயும் வேலை செய்யவில்லை, அப்டேட்டும் ஆகவில்லை, எனவே பொறுமை இருப்பவர்கள் முடிந்தால் படிக்கவும். 

Friday, August 26, 2011

தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம் - சமச்சீர் கல்வி தோல்வியா?



சமீபத்தில் அதிமுக அரசு நூறு நாட்களை கடந்த போது செய்திகளில் படித்தது, சமச்சீர் கல்வி தோல்வியுடன் நூறு நாட்களை கடந்தது அதிமுக அரசு என்று, சரி சமச்சீர் கல்வி என்றால் என்ன? ஏன் அதை கொண்டு வந்தார்கள்? எதற்காக அதை நிறுத்தி வைத்தார்கள்? இப்பொழுது ஏன் மீண்டும் அமல்படுத்துகிறார்கள் என்று யோசித்த போது

சமச்சீர் கல்வி வேண்டும், அனைவருக்கும் சமமான, பொதுவான, ஒரு பாடத்திட்டம் வேண்டும் என பல்வேறுபட்டவர்களால் நீண்ட காலமாக போராடி நீதிமன்றத்திலே வழக்கெல்லாம் தொடுத்து ஒருவழியாக முந்தைய திமுக அரசும் ஏற்றுக் கொண்டு ஒரு நிபுணர் குழுவை அமைத்து ஒருமாதிரியாக சமச்சீர் பாடத்திட்டத்தை கொண்டு வந்து அமல்படுத்தும் போது ஆட்சிமாற்றம் நிகழ்ந்து ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்தார்

சமச்சீர் கல்வி தரமானதாக இல்லை, அதை மீண்டும் தரப்படுத்தி அடுத்த ஆண்டு அமல்படுத்துவோம் என அறிவித்தார், சரி தரம் இல்லை தரம் இல்லை என்றால் என்ன வகையில் தரம் இல்லை என்று பார்த்தால் முந்தைய அரசாங்கத்தின் துதிபாடும் வகையில் கருணாநிதி அவர்களின் புகழ்பாடும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்

சமச்சீர் கல்வியை பொறுத்தவரை பாடத்திட்டத்தில் கடந்த ஆட்சியாளர்களின் புகழ்பாடும் வரிகள் இருந்தால் அதனை நீக்கிவிடலாம், இப்பொழுதும் அதைத்தான் செய்கிறார்கள், அப்படி செய்துவிட்டு தாராளமாக அமல்படுத்தி இருக்கலாம்,

இல்லை சரியான கற்பித்தல் வசதிகள் இல்லை, அந்த பாடத்திட்டத்தை கற்பிக்கும் அளவுக்கு ஆசிரியர்களின் தரம் இல்லை என்றால் அது அரசாங்கத்தின் தவறுதானே தவிர கல்வியின் தரம் அல்ல, தள்ளிப்போடும் ஒருவருடத்தில் மட்டும் ஆசிரியர்களின் தரம் உயர்ந்துவிட போவதில்லை, வீணான இந்த இரண்டு மாத காலங்களில் வீணான நேரத்தில் ஆசியர்களுக்கு இடையே குழு அமைத்து சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பற்றிய ஒரு புரிந்துணர்தலையாவது ஏற்படுத்தி இருக்கலாம்

அல்லாது மெட்ரிகுலேசன் பாடத்திட்டம்தான் சிறந்தது, அதை படிப்பவர்கள்தான் சிறந்தவர்கள் என்றால் தாராளமாக அதையே சமச்சீர் கல்வியாக அமல்படுத்தி இருக்கலாம், காசு பணம் வசதிகள் இல்லாத ஏழைகள் தாங்கள்தான் படிக்கவில்லை, தங்களது குழந்தைகளாவது ஆங்கில மீடியத்தில் படித்து பெரியாளாகட்டும் என்று தகுதிக்கு மீறி கடன் வாங்கி படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒன்றுக்குமே வழியில்லாமல்  ஸ்டேட்போர்டில் அரசாங்க பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும் அதே கல்வியை கொடுப்பதுதானே சரியானதாக இருக்கும்

[இதில் இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விசயம், தமிழ் மொழியையே ஒதுக்கி, மம்மி, டாடி, என கூறும் ஒரு ஆங்கில சமுதாயத்தை உருவாக்கி, தாய்மொழியையே திணறடித்த பெருமையும் இந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளையே சாரும், இன்னும் தெளிவான சொல்லப் போனால் தமிழ்மொழியிலேயே எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை ஆங்கிலம்]


நிறைய மெட்ரிகுலேசன் பள்ளிகளில் வெறும் இளங்கலை படித்தவர்கள்தான் பனிரெண்டாம் வகுப்புக்கு பாடம் எடுக்கிறார்கள், +2 வரை படித்தவர்கள் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கெல்லாம் ஆல்பாஸ் ஆவதில்லையா? இல்லை அவர்கள் மெட்ரிகுலேசன் பாடத்திட்டத்தையே நடத்துவதில்லையா?

இப்படிப்பட்ட தனியார் பள்ளிகளை ஒப்பிடும் போது அரசாங்க பள்ளிகளின் ஆசிரியர்களின் தரமும், அவர்களின் கல்வித்தரமும் அதிகமாகவே உள்ளது, அது இல்லாமல் வகுப்பறை வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி வசதி, விளையாட்டு மைதானம் இல்லாமை போன்ற வசதிகள்தான் பிரச்சனை என்றால் அதற்கு முற்று முழுதாக அரசாங்கமே காரணம் அல்லாமல் சமச்சீர் கல்வி அல்ல, இத்தனை வருடங்களாக அதற்காக ஒரு நடவடிக்கையும் எடுக்காதவர்கள் இந்த ஒரு வருடத்தில் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடுவார்களா என்ன?

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்த தரமான ஆசிரியபயிற்சி பள்ளிகளும், அங்கே தரமான பாடத்திட்டங்களும் தேவை, கூடவே நிரப்பப்படாமல்  காலியாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப வேண்டிய நிலையும் உள்ளது, இதை எதுவுமே செய்யாமல், 100 மாணவர்கள், 200 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் இருந்தால் ஆசிரியர்களுக்கும் பொறுப்பு வராது, வெறுப்பே வரும்

எந்த பாடத்திட்டமானாலும் படிப்பது எதுவுமே வாழ்க்கையில் நடக்கபோவது இல்லை, இங்கு தியரி வேறு, பிராக்டிகல் வேறு, படிப்பு என்பது அவர்கள் கற்றுக் கொள்வதற்கான, தெரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பே தவிர, அதுவே வாழ்க்கை அல்ல,

எல்லா பாடங்களிலும் முதல்மதிப்பெண் வாங்கி பள்ளியில் சிறந்தவர்களாக விளங்கி வாழ்க்கையில் தோற்றவர்களும் உண்டு, ஒன்றுமே படிக்காமல் இருந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் உண்டு, எல்லாமே அவரவர்கள் கற்றுக் கொள்ளும் அனுபவபாடமும், வாழ்க்கைபாடமும்தான் தீர்மானிக்கிறது, அதுவே அவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது

ஆனால் இந்த அனுபவத்தை முதன்முதலாக கற்றுக் கொடுப்பவர்கள், கொடுக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள்தான், ஆனால் கற்றுக் கொடுக்க வேண்டிய ஆசிரிய பெருமக்களுள் சிலர், ஏதோ இயந்திரம் போல கடமையே என பாடத்தை நடத்தி விட்டு டெஸ்ட் வைத்துவிட்டு, பரீட்சையும் முடிந்தது, நம் கடமையும் முடிந்தது என விட்டுவிடுவதே இத்தகைய பிரச்சனைக்கு காரணம் என எண்ணுகிறேன்

தனியார் பள்ளிகளில் இத்தகைய பிரச்சனைகள் பெரும்பாலும் இல்லை எனலாம், ஏனெனில் ஒருவகுப்பில் மாணவர்கள் பெயிலானால் அதற்கு அந்த வகுப்பு ஆசிரியர்களே பொறுப்பு என்ற எழுதப்படாத விதிதான் அதற்கு காரணம், மாணவன் பெயிலானால் சம்பளம் கொடுக்கமாட்டார்களோ, வேலை போய்விடுமோ என்ற பயம்தான் காரணம்

ஆனால் அரசு பள்ளியில் நடப்பதென்ன? அரசாங்க உத்தியோகம், வேலையை விட்டு தூக்க முடியாது, யாரும் கேள்வி கேட்க முடியாது, நல்ல சம்பளம், மீறி எதாவது பிரச்சனை என்றால் சங்கம் இருக்கிறது, இதனால்தானே தனியார் பள்ளி ஆசிரியர்களும் அரசாங்க பணியினை நோக்கி ஓடுகிறார்கள்

இத்தகைய அலட்சியப் போக்கை தடுத்தாலே அரசாங்க பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சமமாக, ஏன் அவர்களை விட மேலாகவே வீறு நடை போடும், அரசாங்க பள்ளி மாணவன் பெயிலானாலும் ஆசிரியரே பொறுப்பு என்ற நிலை வர வேண்டும், சமச்சீர் கல்வியை தடுக்க கோர்ட், கேஸ் என்று இரண்டு மாதங்களாக பாடுபட்ட அரசு இது போன்ற அலட்சிய போக்கையும் தடுக்கவும் பாடுபட வேண்டும், தக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்,

மாதா பிதா குரு என்ற மூன்றாம் நிலையில் உயர்த்தி வைத்திருக்கும் ஆசிரிய சமூகம் தன் பொறுப்புணர்ந்து நடக்கட்டும், நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை, பொறுப்பற்று நடக்கும் சிலர் மட்டுமே, ஒன்றாம் வகுப்பில் இருந்து கிடைக்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் பொறுத்தே மாணவனின் வளர்ச்சியும், கற்றுக் கொள்ளும் திறனும் அமைகிறது, அனைத்து ஆசிரியர்களும் சரியாக செயல்படும் போது ஒரு பொறுப்புமிக்க சமுதாயம் இயல்பாகவே உருவாகும்

கடைசியாக ஒரு வாய்ப்புக்காகவோ, வேலைக்காகவோ ஒரு அரசாங்க பள்ளியின் மாணவனும், மெட்ரிகுலேசன் பள்ளி மாணவனும் முன்னின்றால், அங்கு அவர்கள் இருவரின் தனித்திறமை, கற்றுக் கொள்ளும் ஆர்வம், முடிவெடுக்கும் திறன், சமயோஜித புத்தி, தகுதியை மட்டுமே கணக்கில் கொள்ளும் நிலை வர வேண்டும், மாறாக இவன் மெட்ரிகுலேசனில் படித்தவன் அதனால் சிறந்தவன், இவன் ஸ்டேட் போர்டில் படித்தவன் அதனால் திறமையற்றவன் என்ற முடிவுக்கு வர வேண்டிய நிலை வர வேண்டாம்

நாங்கள் எதிர்பார்த்தது குதிரை, கிடைத்தது கழுதை, இந்த சமச்சீர் கல்வி அரைவேக்காட்டு பாடத்திட்டம், இந்த சமச்சீர் கல்வியை படித்தால் கிளர்க் வேலைக்குதான் போக முடியும் என்பது போன்ற விதண்டாவாதங்கள் கூறிப் பயனில்லை, ஏனென்றால் எதையும் செய்ய ஆரம்பிக்காலமே ஒரு முடிவுக்கு வர வேண்டாமே, நூறு சதம் எல்லாவற்றையும் சரி செய்துவிட்டுதான் ஆரம்பிப்போம் என்றால் இன்னும் 10 வருடங்கள் ஆனாலும் இதே நிலைமைதான் நீடிக்கும், ஏனென்றால் இங்கு செயல்படும் அரசாங்கமும், அரசு இயந்திரமும் அந்த நிலையில்தான் உள்ளது

அப்துல் கலாமே அரசு பள்ளியில் பழைய பாடத்திட்டத்தில் படித்துதான் ஜனாதிபதி அளவுக்கு உயர்ந்துள்ளார், இன்னும் நிறைய அறிவாளிகளும், மேதைகளும் தெருவிளக்கிலும், மண்ணென்ணெய் விளக்கிலும் எந்த வசதிகளும் இல்லாமல்தான் படித்து வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர்

இரண்டு மாதங்களாக வழக்கு நடத்த நேரமிருந்த அரசுக்கு, ஏனோ தனியார் பள்ளிகளின் கல்விகட்டண கொள்ளையை பற்றி மட்டும் பேசவோ, தடுக்கவோ நேரமில்லாமல் போனது ஆச்சரியம்தான், இன்றும் கூட சில தனியார் பள்ளிகளில் மெட்ரிகுலேசன் பாடத்தைதான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்,


சமச்சீர் கல்வி விசயத்தில் அரசுக்கு தோல்வி ஏற்பட்டு விட்டதே என கருத வேண்டிய அவசியம் கூட இல்லை, அரசானது இரும்பு கரம் கொண்டு இந்த தனியார் பள்ளிகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்தி பெற்றோர்கள் அதிகமாக கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தந்தாலே போதுமானது, சமச்சீர் வழக்கு பிரச்சனையை மறந்து மக்கள் அடியோடு மறந்து சமூக நீதி காத்த வீராங்கனை என கொண்டாடி விடுவார்கள்

இது முழுக்க முழுக்க ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை அரசுப்பள்ளியிலேயே, தமிழிலேயே படித்து வளர்ந்த ஒரு மாணவனின் பார்வையே, இது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம், ஒரு வருட இடைவெளி என்பது சிலருக்கு சரியாகவும் தோன்றலாம், ஆனால் அந்த ஒரு வருடம் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்துக்கு அதுவே ஆப்பாகவும் அமைந்துவிடும் என்பது என்னைப்போன்ற ஒரு வருடகாலத்தில் வாய்ப்புகளை இழந்த அரசாங்க பள்ளியில் படித்த மாணவர்களுக்கு புரியும் என்றே எண்ணுகிறேன், எனவே தவறாக இருந்தால் எடுத்துச் சொல்லுங்கள், சரியாக இருந்தால் திருத்திக் கொள்கிறேன்

எந்த ஒரு மாற்றமும் உடனடியாக நிகழ்ந்து விடுவதில்லை, எனவே நடைபெறும் மாற்றத்தையும் யாரும் தடுக்கவும் வேண்டாம்முயலவும் வேண்டாம், ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது, நாளை இந்த ஆட்சியே கூட மாறிப் போகலாம்..! யார் கண்டது..!

- இரவுவானம்