Wednesday, December 12, 2012

ATM மிஷினும், வாட்ச்மேன்கள் தொல்லையும் ..!



கம்பெனியில் இருந்து போன், கேஷியர் நண்பன்தான் பேசுனான், டேய் அக்கவுண்ட்ல சேலரி கிரடிட் ஆயிருச்சுடான்னு, சேலரி கிரடிட் ஆயிருச்சா? நமக்கு ஏது சேலரி? அதான் எல்லாம் பிடித்தமும் செஞ்சிருப்பானே? இன்னமும் என்ன பாக்கி இருக்கப் போவுது? சர்தான் பாப்பமே.

பக்கத்துல கொஞ்ச தூரம் தள்ளி ஒரு ஏடிஎம் இருந்தது, சரின்னு பக்கத்துல போனேன், வாட்ச்மேன் என்கூட படிச்ச தோஸ்த் மாதிரி சிரிச்சான், நானும் சிரிச்சுட்டு உள்ள போய் கார்டை சொருகினேன், பாலன்ஸ் 93 ரூபான்னு வந்துச்சு, 93 ரூபாயா? இதான் சேலரியா? பாலன்ஸ் செக் பண்ணி பாத்தா 63 ரூபாதான் சேலரின்னு போட்டு இருக்கு, பழைய பாக்கியும் சேர்ந்து 93 ரூபா, கருமம் புடிச்சவன் ஒரு ஏழு ரூபா ஜாஸ்தியா போட்டு இருந்தா ஒரு குவாட்டருக்காவது ஆகிருக்கும், சே வட போச்சேன்னு வெளில வந்தேன்.

ஏடிஎம் வாட்ச்மேன் முன்னவிட அதிகமா சிரிச்சான், சரின்னு நானும் சிரிச்சிட்டே நடந்தேன்,

சார், சார்

சாரா? யாரு நம்மளயா? அந்த வாட்ச்மேந்தான்

சொல்லுங்க

ஒன்னுமில்ல, டீ செலவுக்கு எதாச்சும் குடுத்தீங்கன்னா? டிப்சு சார்னு தலய சொறிஞ்சான்

டிப்ஸா? ஏடிஎம்ல பணம் எடுக்க வந்ததுக்கா? என்னமோ நீயே ஏடிஎம் மிஷினா மாறி வாய் வழியா பணம் கொடுத்த மாதிரி சர்வீஸ் பண்ண டிப்ஸ் கேட்குறியா?

வேண்ணா ஒன்னு பண்ணலாம், என்கிட்ட நாலு ரூபா இருக்கு, உன்கிட்ட நாலு ரூபா இருந்தா சொல்லு எதிர் டீக்கடைல ஒரு டீ வாங்கி ஒன்பைடூ சாப்பிடாலாம்னேன்.

அவன் என்ன பார்த்த பார்வையில ஓராயிரம் மில்லி எச்சில் துப்பும் பாவனை இருந்ததால் மேற்கொண்டு நிற்காமல் ஓடி வந்துவிட்டேன், நல்லவேளை வொயிட் சர்ட் தப்பிச்சது.


ஒரு அகால வேளையில் பிரண்டு ஒருத்தருக்கு போன் பண்ண பேலன்ஸ் இல்லாம ரொம்ப அர்ஜெண்டா ஏடிஎம்ல பணம் எடுக்க போனா வாட்ச்மேன் கதவை சாத்திட்டு புல் ஏசி போட்டுட்டு கொறட்டை விட்டு தூங்கிட்டு இருக்காரு, யோவ் எந்திரியா? அர்ஜெண்ட்யா? எந்திரியான்னு கத்தவிட்டான், கடைசில ப்ளீஸ் அஞ்சலி, எந்திரிமா அஞ்சலின்னு மணிரத்னம் படம் மாதிரி கெஞ்சாம விட்டதுதான் பாக்கி.

இப்படித்தான் பல வாட்ச்மேன்க ஏடிஎம்ம சொந்த வீடு மாதிரியே பொலங்கிட்டு இருக்காங்க, ஒருத்தரு புல் மீல்ஸ்ச மிஷின சுத்தி பரப்பி விட்டு உள்ள ஆளு நிக்க கூட இடம் இல்லாம சாப்பிட்டுகிட்டு இருந்தாரு, அன்னைக்கு நான் பணம் எடுக்க ஆடுன ஆட்டத்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவால ஆடிருந்தா நயந்தாரா எனக்கே கிடைச்சிருப்பாங்க, அப்படி டான்ஸ் ஆடியும் கடைசில டம்ளர தட்டிவிட்டுட்டேன், டென்சனாகி அந்தாளு யோவ் அறிவில்லையான்னு கத்தறான், யாரு எனக்கா? போடாங்க @#$%^& எதாவது சொல்லிட போறேன்னுட்டு வந்துட்டேன்.


நைட் வாட்ச்மேன்க பாதிபேரு பாதி என்ன பாதி முழுசாவே வயசான ஆளுங்களாத்தான் இருக்காங்க, அவங்கள பொறுத்தவரை அந்த சின்ன ரூம் அவங்க சொந்த வீடுமாதிரிதான், திருப்பூர் குமரன் ரோடு ஏடிஎம்ல ஒருத்தரு இருப்பாரு, ஏடிஎம் முன்னாடி வண்டிய நேரா நிறுத்துனா மட்டும்தான் உள்ளயே விடுவாரு, கோணலா நிறுத்துனா அவ்வளவுதான், சண்டை கட்டி போதும் போதும்னு ஆகிரும், கொய்யால அவனவன் பணத்த எடுக்க எவ்வளவு அழிச்சாட்டியத்த தாங்க வேண்டியதா இருக்குன்னு பல தடவை நினைச்சதுண்டு.

வயசான காலத்துல வீட்டுல ரெஸ்ட் எடுக்காம இங்க வந்து உட்கார்ந்து உயிரை எடுக்கறாங்களே, பத்து பேர மொத்தமா பாத்தா செத்திருவாங்க போல இருக்காங்க, இவங்க எல்லாம் ஏடிஎம் மிஷினயும், பணத்தயும் எப்படி பத்திரமா பாத்துக்குவாங்கன்னு பேங்கு நம்புதுன்னு ரொம்ப நாளா மனசுக்குள்ள ஒரு கேள்வி இருந்தது.


வயசான காலத்துல ரெஸ்ட் எடுக்க வேண்டிய வயசுல, நைட்டு நடுங்கற குளிர்ல அப்படி உட்கார்ந்து இருக்கனும்னு அவங்களுக்கு என்ன அவசியம்? உற்று கவனிக்க்கும் பொழுதுதான் தெரிஞ்சது ஒவ்வொருத்தரு முகத்துலயும் ஒவ்வொரு விதமான பீலிங், நேத்து ஒருத்தரு யாருக்கும் தெரியாத மாதிரி கண்ணீர் விட்டுட்டு இருந்தாரு.

எந்த மகன் பாக்க மாட்டேன்னு சொன்னானோ? எந்த மகள் கல்யாணத்துகு வாங்குன கடனை அடைக்க முடியலையோ? மாப்பிள்ளைக்கு அடுத்த சீருக்கு என்ன பண்ணப்போறமோங்கற கவலையோ? வாங்குன சீட்டுக்கு பணம் கட்ட முடியாத அவஸ்தையோ? வட்டிக்கு வாங்கிட்டு கண்டவன் வாய்ல வாங்கற நிலைமையோ? வீட்டு வாடகை கூட குடுக்க முடியாத நிலைமையோ? அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படற நிலைமையோ? இப்படி எதாவது ஒன்னு கண்டிப்பா இருக்கத்தான் போகுது,

மிஷின் நிறைய பணமும், அதை எடுக்க வர ஜனங்களையும், பணம் இல்லாம வெளில உட்கார்ந்து பார்க்ககூடிய வயசான வாட்ச்மேன்களோட மனசுல என்ன நினைப்பு ஓடும்?

ஏழையா பொறந்து ஏழையாவே முதுமை எய்துனா இறுதிகாலம் கூட நிம்மதியா அமையாதான்னு ஏங்கித்தான் சாவனும்னு தலையெழுத்து போல, இனிமே தப்பா நினைக்க மாட்டேங்க, எந்த வாட்ச்மேனாவது தொல்லையே கொடுத்தாலும்..! 

Monday, December 10, 2012

தமிழ்ச்செடியின் பதிவர் பாராட்டு விழா நிகழ்வு ..!


மிழ்ச்செடியானது
தமிழ் இணைய உலகில் செடியாக வேரூன்றி எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், வாசகர்கள், மற்றும் பதிவாளர்களை நம்மால் முடிந்தளவு ஊக்குவித்து அவர்களை மரமாக தழைக்க செய்வதே தமிழ்ச்செடியின் தலையாய நோக்கம்.

இணையத்தில் பரவலாக காணப்படும் தமிழ், தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தமிழ்மொழி சம்பந்தமான தமிழாசிரியர்கள், பழைய தமிழ்மொழி கல்விமுறை, சேர்க்கை, இன்னபிற விசயங்களையும் பதியச்செய்வதும், அவற்றை பதியச்செய்யும் பதிவாளர்களையும் இனம் காணவும், அவை தலைமுறையை தாண்டி செல்லவும் நம்மால் முடிந்த ஒரு செயலாகவே தமிழ்ச்செடியை உருவாக்கினோம்.

இந்த தமிழ்ச்செடியானது யாருக்கானதும் அல்ல, குறிப்பிட்ட சிலர் மட்டுமே நடத்தும் இணையதளமாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம், இந்த தமிழ்ச்செடி தமிழை நேசிக்கும் எல்லோருக்குமானது, இதில் யார் வேண்டுமென்றாலும் எழுதலாம், எழுத ஆசை இருந்தும் சிலபல காரணங்களால் தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கும் வாசகர்கள் உட்பட அனைத்து பதிவாளர்களும் எழுதலாம், ஒரே ஒரு விசயம் அது தமிழ் சம்பந்தமான பதிவாக மட்டுமே இருக்க வேண்டும்.

தமிழ் சம்பந்தமான எதாவது விசயம், அது சின்னதோ பெரியதோஅடஎன்று ஆச்சரியப்படுத்தும் நிகழ்வுகள் நம் வாழ்வில் ஏராளம் நடந்திருக்கும், அது என்னவாக இருந்தாலும் எழுதுங்கள், பதியச்செய்யுங்கள்.

மனிதனுக்கு இறப்புண்டு, இணையத்திற்கு இல்லை, காகிதத்தில் எழுதுவது கசக்கி எறிந்துவிடலாம் இணையம் அப்படியல்லஇன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இங்கு பதியப்படுவது இணையம் உள்ளவரை நிலைக்கும், தலைமுறைதள் தாண்டி செல்லும், எனவே தமிழ்ச்செடிக்கு உங்கள் பங்களிப்பையும் அளியுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

http://www.tamilchetee.com/

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


தமிழ்ச்செடியின் முதல்விழா ஞாயிறு அன்று செண்பகம் மக்கள் சந்தையில் நடைபெற்றது, விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர், திரு. சுப்ரபாரதிமணியம் அவர்கள் கலந்து கொண்டு இணையமும் தமிழும் என்ற தலைப்பில் பேசினார்.


விழாவிற்கு தொழிற்களம், மக்கள் சந்தை நிறுவனர் திரு. சீனிவாசன் ஐயா அவர்கள் தலைமை தாங்கினார், தொழில் சார்ந்த மொழி சார்ந்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார், திரு.வீடு சுரேஷ்குமார் அவர்கள் வரவேற்புறை ஆற்றினார், நவம்பர் மாத சிறந்த சிறுகதை எழுத்தாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.நா. மணிவண்ணன் அவர்களுக்கு, திரு. ஜோதிஜி அவர்கள் பரிசு வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார், தனது பேச்சின் பொழுது பலவிசயங்களையும் அழகாக பட்டியலிட்டு தனது உரையை பதிவு செய்தார், திரு. மணிவண்ணன் மதுரையிலிருந்து வந்திருந்து பரிசினை பெற்றுக் கொண்டு ஏற்புறை நிகழ்த்தினார்.


மெட்ராஸ்பவன் சிவக்குமார் மற்றும் கோவை மு.சரளா ஆகியோரின் உரைக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது, கோவை நேரம் ஜீவா, உலகசினிமா ரசிகன் பாஸ்கரன் சார், ஆரூர் மூனா செந்தில், சசிமோகன் குமார், நிகழ்காலத்தில் சிவா சார் போன்றோர் வலையுலகில் தமது அனுபவத்தினை பகிர்ந்து கொண்டார்கள் மற்றும் ஆசிரியை விஜயலட்சுமி, திரு. யோகானந்தன் சார் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்டார்கள், இறுதியாக தொழிற்களத்தின் திரு. அருணேஸ் அவர்கள் நன்றியுறை நிகழ்த்தி விழாவினை நிறைவாக முடித்து வைத்தார்.


மொத்தத்தில் இது ஒரு பதிவர் பாராட்டு விழாவாக இல்லாமல் பங்கேற்ற அனைவரும் கலந்துபேசிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வாகவே நிகழ்ச்சி அமைந்திருந்தது சிறப்பாக இருந்தது.


விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த எழுத்தாளர் திரு. சுப்ரபாரதிமணியன் அவர்களுக்கும், தமிழ்ச்செடிக்கு எல்லா வகையிலும் ஆக்கமும், ஊக்கமும், இடமும் தந்த தொழிற்களம் மற்றும் மக்கள் சந்தை நிறுவனர் திரு. சீனிவாசன் ஐயா அவர்களுக்கும், மற்றும் திரு. அருனேஸ் அவர்களுக்கும், மற்றும் தொழிற்களத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், பல்வேறு ஊர்களில் இருந்து வந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், தமிழ்ச்செடியின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழ்ச்செடியின் வளர்ச்சிக்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கிறோம்.

நன்றி, வணக்கம் ..!